நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சாக்கு பையை உடல் முழுவதும் மூடி தூங்கிய வாலிபர்: வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான தகவலால் பரபரப்பு

நாகர்கோவில்: சமூக வலை தளங்களில் பரவும் பல பொய்யான தகவல்கள் மக்களை பதற்றம், பரபரப்புக்கு உள்ளாக்குவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்குமூடையில் பிணமாக வீசப்பட்டுள்ளார் என்று பரவிய தகவல் பரபரப்பை உண்டாக்கியது. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில், தற்போது இரட்டை ரயில் பாதைக்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 2 வது பிளாட்பாரத்தில் மட்டுமே ரயில் வந்து செல்கிறது. காலை வேளையில் இந்த பிளாட்பாரத்தில் பலர் நடை பயிற்சி மேற்கொள்வார்கள்.

வழக்கம் போல் இன்று காலையிலும் ஏராளமானவர்கள் நடைபயிற்சியில் இருந்தனர். அப்போது திருவனந்தபுரம் வழிப்பாதையில் பிளாட்பாரத்தையொட்டி மஞ்சள் கலர் சாக்கு பையை உடல் முழுவதும் மூடியவாறு வாலிபர் உறங்கிக் கொண்டிருந்தார். காலை 8 மணியளவில் வெயில் சுட்டெரிப்பது கூட தெரியாமல் உடலில் எந்த வித அசைவும் இல்லாமல் தூங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த சிலர், வாலிபரை கொலை செய்து சாக்குமூடையில் கட்டி வீசி உள்ளனர் என வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பினர்.  இந்த தகவல் காவல்துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரிய வர அனைவரும் பதறி அடித்துக் கொண்டு அங்கு சென்றனர்.

அப்போது திடீரென அந்த வாலிபர் எழுந்து எதுவும் நடக்காதது போல் அவராக நடந்து சென்றார். இதையடுத்து பதறி அடித்துக் ஓடி வந்த அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றனர். வாட்ஸ் அப்பில் வரும் தகவல் எந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்துகிறது என போலீசாரும் மனம் நொந்து சென்றனர்.

Related Stories: