மேற்குவங்கத்தில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என பேசிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை..!!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என பேசிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதி மதியம் 12 மணி வரை மேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பாஜக நிர்வாகி ராகுல்சின்ஹா-விற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேற்குவங்க சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி இம்மாதம் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 4ம் கட்ட தேர்தலின் போது வாக்குச்சாவடிக்கு வெளியே மத்திய ஆயுத காவல் படையான சி.ஆர்.பி.எஃப் காவலர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே நடந்த தகராறின் போது சி.ஆர்.பி.எஃப் காவலர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் சின்ஹா, சர்ச்சைக்குரிய வகையில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருபுறம் பாரதிய ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பேச்சுக்கள் குறித்த சர்ச்சைகளை குறிப்பிட்டு புகார் அளித்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு புறம்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி,  பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை குறிப்பிட்டு புகார் அளித்து கொண்டிருக்கிறது.

மேலும், தேர்தல் விதிமீறல்களின் அத்துமீறல்கள் என்ன? அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்றவாறு தேர்தல் ஆணையமும் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. இதன் தொடற்சியாகவே நேற்று மாலை மம்தா பேனர்ஜிக்கு 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குவங்க பாஜக நிர்வாகி ராகுல் சின்ஹா 2 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Related Stories: