ஊட்டி : தாவரவியல் பூங்கா நர்சரியில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தற்போது பூக்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆண்டு தோறும் கோடை சீசனின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது, தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 5 லட்சத்திற்கு மேல் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
அதே போல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் செடிகள் வைக்கப்பட்டு அதிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த தொட்டிகள் மாடங்களில் பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைக்கப்படும். அவைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. மேலும், மலர் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இம்முறை சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ள நிலையில், மலர் கண்காட்சி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த இரு மாதங்களுக்கு முன் துவங்கியது.
இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேேபால், 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பூங்காவில் உள்ள நர்சரிகளில் தற்போது, பால்சம், ஐபோபியா, பிரமிளா ஆப்கானிகா, அகில், கேக்டஸ் அக்குரியா போன்ற மலர்கள் பூத்துள்ளன. ஓரிரு நாட்களில் இந்த மலர் செடிகள் சுற்றுலா பணிகள் பார்வைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் முதல் வாரம் முதல் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம்.