டெல்லி: அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வரும் 14ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். ஓராண்டுக்கு மேலாக அமெரிக்கா, பிரேசில் உள்பட உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரசின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்திருந்த நிலையில் அண்மை காலமாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, சட்டீஷ்கர், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 50 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என்று மத்திய குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்க்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பண்பாட்டில் உள்ள நிலையில் அவற்றின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ரஷ்யாவின் sputnik தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 2 தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி (புதன் கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபடவுள்ள பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதற்கு பின்னர் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.