திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி காவல்சரகம் பிரமன்பேட்டையில் நள்ளிரவில் பெண்ணிடம் நகை பறித்த 2 மர்ம நபர்களை ஊர் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்காட்டுப்பள்ளி காவல் சரகம் பிரமன்பேட்டை குடியானத்தெரு ராஜப்பா மனைவி பழனிபாப்பா(30).இவர் கணவர், குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென மின்சாரம் கட்டானது. அப்போது மர்ம நபர்கள் பழனிபாப்பாவின் கழுத்திலிருந்த தாலி செயினை பறிக்க முயன்றது தெரிந்தது. அவர் திருடன், திருடன் என்று கத்தினார். கத்தினால், கத்தியால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் பழனிபாப்பா கழுத்திலிருந்த ஐந்தரை பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். கணவர் ராஜப்பா மற்றும் பழனிபாப்பாவின் அலறல் கேட்டு ஊர் மக்கள் விழித்துக்கொண்டு வயல் வழியாக ஓடிய மர்ம நபர்கள் 3 பேரையும் விரட்டி சென்றனர். அறுவடை செய்யப்பட்ட வயல் வழியாக ஓடும்போது தடுமாறி விழுந்து மர்ம நபர்களுக்கு காயம் ஏற்பட்டது.