தேசிய அளவிலான தடுப்பூசி திருவிழா தொடக்கம்: தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள்..! பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிக்கா உட்சவ் இன்று முதல் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்த உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஒருவருக்கு தொற்று உறுதியானால் அப்பகுதியை மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிரதமர் மோடி, கடந்த 8ந்தேதி தடுப்பூசியின் 2வது டோசை செலுத்தி கொண்டார்.

இந்த நிலையில், தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது.  இதுபற்றி பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில், நாம் இன்று தேசிய அளவில் டிகா உத்சவ்வை தொடங்க இருக்கிறோம். அதனால், நாட்டு மக்கள் 4 முக்கிய விசயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள்.  கொரோனா சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்யுங்கள். முக கவசம் அணிந்து செல்லுங்கள்.  மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்படுத்துங்கள்.  யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டல பகுதியை உருவாக்குங்கள் என கூறியுள்ளார்.

Related Stories: