சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு கொரோனா அச்சத்தால் பக்தர்கள் வருகை குறைந்தது

வத்திராயிருப்பு : கொரோனா 2வது அலை அச்சம் காரணமாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை சாமி தாிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

நேற்று பிரதோசத்தையொட்டி அதிகாலை 4 மணியில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் பக்தர்கள் குவிந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிகக் வேண்டும். இரவில் தங்கக் கூடாது என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

காலை 6.45 மணி அளவில் தாணிப்பாறை வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் கைகளில் கிருமி நாசினி தௌிக்கப்பட்டது.  அதன்பின் மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர். கொரோனா 2வது அலை அச்சம் காரணமாக தொலைதூரத்தில் இருந்து பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது.

பிரதோஷத்தையொட்டி கோயிலில் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல அபிசேகம் நடைபெற்றது. பின் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் கோயில் பறம்பரை அரங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

இதனிடையே தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் நாளை பங்குனி அமாவாசை வழிபாட்டுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தாணிப்பாறையில் தண்ணீர் தட்டுப்பாடு

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள நேற்று அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதிக்கு வந்தனர். இவர்கள் போதிய தண்ணீர் வசதியின்றி அவதிப்பட்டனர்.

குடிநீர் இல்லாமல் விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டது. கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதியில்லாததால் பெண்கள் அவதிப்பட்டனர். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த சம்மந்தப்பட்ட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: