சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதுகிறது. கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்ட நிலையில், 14வது சீசன் இந்தாண்டு இங்கேயே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் லீக் சுற்றும், நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடக்க உள்ளன. கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதை அடுத்து, எல்லா போட்டிகளும் ரசிகர்களின்றி பூட்டிய அரங்கில் நடைபெறும். முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. அதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. களமிறங்கும் 8 அணிகளில், அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. அந்த அணி 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில், மும்பை அணி கடைசி 8 ஆண்டுகளில் தான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.