தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று மாலை அனகாபுத்தூர் பகுதியில் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து, தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள், வளர்ச்சி திட்ட பணிகள் என அனைத்தையும் பொதுமக்கள் நன்கு அறிவீர்கள், அதுபோல மீண்டும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கிடைத்திட மீண்டும் அதிமுகவிற்கு வாய்ப்பு தர வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தவுடன், அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்கள், குடும்ப தலைவிக்கு மாதம் 1500 ரூபாய், சூரியசக்தி சமையல் அடுப்பு, இலவச வாஷிங் மெஷின், அனைவருக்கும் வீடு, மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி, மாவட்டங்கள் தோறும் சிறிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா, உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பிரசாரத்தின் போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர். முன்னதாக திருநீர்மலையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளம் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.