பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குமரி மாவட்டம் அருமனையில் தேர்தல் பிரசாரம் செய்தார். குஞ்சாலிவிளை கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கியவர் அங்கிருந்து திறந்த ரதம் போன்ற வாகனத்தில் விளவங்கோடு தொகுதி பா.ஜ. வேட்பாளர் ஜெயசீலன், கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.இந்த பிரசாரத்தின் போது மாவட்டத்தை சேர்ந்த பிற அதிமுக வேட்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. பிரசாரத்தின் போது ஆங்கிலம் மற்றும் இந்தி பாடல்கள் ஒலிபரப்பிய நிலையில் திடீரென்று கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் இடம்பெறும் ‘‘என்ன சத்தம் இந்த நேரம்” என்ற பாடல் ஒலிபரப்பினர். ஓரிரு நிமிடங்கள் கடந்து உள்ளூர் நிர்வாகிகள் சத்தம் போட்டதையடுத்து அந்த பாடல் நிறுத்தப்பட்டது.