மேற்கு தாம்பரம் குளக்கரை பகுதியில் கரிகாலன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு வழியெங்கிலும் பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி நேற்று மேற்கு தாம்பரம், குளக்கரை பகுதியில் தொடங்கி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது,  அவர் பொதுமக்களிடையே பேசுகையில், ‘தாம்பரம் நகர மன்ற தலைவராக நான் இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன்.

குறிப்பாக, தாம்பரம் பகுதியில் உள்ள பல பூங்காக்கள் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டு பெருமளவு முடிக்கப்பட்டது. மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் மேற்கொள்ள குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார்.பிரசாரத்தின்போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், அமமுக வட்ட செயலாளர்கள், அர்ஜூனன், நரேந்திரன், முனுசாமி, தேமுதிக வட்ட செயலாளர்கள் எம்.சி.பாண்டியன், துரை பாண்டியன் உட்பட அமுமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: