திமுக, காங்கிரஸ் கட்சிகள் குறித்து பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உண்மைக்கு புறம்பாக பேசுவதா? கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: திமுக, காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்கு எதிரானது என்று பிரதமர் மோடியும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக, காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்கு எதிரானது என்று பிரதமர் மோடியும், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் நீண்டகாலமாக பெண்களின் மேம்பாட்டிற்காக, உரிமைகளுக்காக கடுமையாக போராடியிருக்கிறது. விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து காந்தி தலைமையில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கிய பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு.

ஆனால், இன்றைய பாஜவின் தாய் ஸ்தாபனமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இதுவரை ஒரு பெண் உறுப்பினராகவோ, தலைமைப் பொறுப்பிற்கோ வந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் கோல்வால்க்கர் சித்தாந்தமே பெண்களுக்கு எதிரானது. ஆனால், காங்கிரஸ் இயக்கத்தில் இன்றைக்கும் பல பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் வருவதை பார்க்க முடிகிறது. எனவே, ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பிரதமர் மோடி உள்ளிட்ட எவர் கூறினாலும், அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தயாராக இல்லாத நிலையில் தேர்தல் பிரசாரத்தை திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற கனவு நிச்சயம் நிறைவேறாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: