மதுரை: சிறைக்கைதிகளின் வழக்கு, நடத்தையை பொறுத்தே முன்கூட்டிய விடுதலை நிர்ணயிக்கப்படுகிறது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை, சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் 125 தண்டனை சிறைக்கைதிகள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையில் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். 2018ன் தமிழக அரசாணைப்படி இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘சம்பந்தப்பட்ட சிறைக்கைதிகளின் வழக்கை பொருத்தும், அவர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டுமே அவர்களது முன்கூட்டிய விடுதலை குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றனர். பின்னர், மனுவிற்கு உள்துறை கூடுதல் தலைமை செயலர், சிறைத்துறை டிஜிபி, மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 27க்கு தள்ளி வைத்தனர்.