சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா நேற்று கலைஞர் தெற்கு பகுதி 137 வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 34.07 கிலோ மீட்டர் 14 மணி நேரம் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் வழியில் எல்லாம் மக்கள் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும் அவரை வரவேற்றனர். அப்போது, திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா பேசியதாவது, “மக்களின் நீண்டநாள் பிரச்னையான அடையாறு ஆற்றங்கரையை ஒட்டி தடுப்புச்சுவர் அமைக்கப்படும். பழுதடைந்த மின்கம்பம் சரி செய்யப்படும். கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் கோயம்பேடு மார்க்கெட் நவீனப்படுத்தப்படும். விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.