கோலார்: கோலார் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ற வகையில் சாலை வசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கோலார் தொகுதி எம்எல்ஏ சீனிவாஸ்கவுடா தெரிவித்தார். கோலார் நகரில் உள்ள மகாத்மாகாந்தி சாலை விரிவாக்க பணியை பூஜை செய்து தொடங்கி வைத்து அவர் பேசும்போது, ``கோலார் நகரில் இதற்கு முன் மக்கள் தொகை மட்டுமில்லாமல் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. 5 கி.மீட்டர் சுற்றளவில் இருந்த நகரின் எல்லை தற்போது, இரு மடங்கு அதிகரித்துள்ளது. தேரஹள்ளி மலை வரை கோலார் நகரின் எல்லை வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமபுறங்களில் வேளாண் தொழில் பொய்த்துள்ளதால், விவசாயிகள் பிழைப்பு தேடி நகர பகுதிக்கு வருகிறார்கள். இதனால் கோலார் நகரில் மக்கள் தொகை 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்கள் தொகையுடன் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.