‘‘கோவிந்தா கோவிந்தா’’ கோஷங்களுடன் ராமகிரியில் பெருமாள் கோயில் தேரோட்டம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே, ராமகிரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.குஜிலியம்பாறை அருகே, ராமகிரியில் 600 ஆண்டு பழமை வாய்ந்த கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் தேரோட்ட திருவிழா மார்ச் 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்

தினசரி மண்டகப்படிதாரர்களின் வாகன புறப்பாடு, சாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில் கோயிலில் இருந்து எம்பெருமாள், தேவி, பூதேவி ஆகியோரின் சிலைகள் பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, திருத்தேரில் வைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது பக்தர்கள் ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என கோஷங்களை எழுப்பினர்.

 தேர் வீதிகளில் உலா வந்த தேர், மதியம் 12.35 மணியளவில் கோயில் வாசலை வந்தடைந்தது. மார்ச் 31ம் தேதி 11ம் நாள் மஞ்சல் நீராடல், பல்லாக்கு அலங்காரம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில், கோயில் பக்த சபா டிரஸ்ட் தலைவர் கருப்பண்ணன், செயலாளர் வீரப்பன், செயல் அலுவலர் மகேஸ்வரி, கரூர் ஐயப்பா சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் கோபால், மணியக்காரர் சதாசிவம், கோயில் அர்ச்சகர்கள், மண்டகப்படிதாரர்கள், கோயில் இளைஞர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

மூதாட்டிகளிடம் நகை பறிப்பு

கோயில் தேரோட்டத்தில் அன்னதானம் வாங்க சென்ற புளியம்பட்டியை சேர்ந்த வீரம்மாள் (70) என்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை திருட்டு ஆசாமி பறித்து சென்றான். அதேபோல் அன்னதானம் நடந்த இடத்தில் பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமி (52) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். கோயில் தேரோட்டத்திற்கு வந்து தங்க செயினை பறிகொடுத்த பெண்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை மனம் வருந்த செய்தது.

Related Stories: