அதிமுக கடந்த தேர்தலில் அறிவித்த செல்போன், மொபட் எங்கே? கனிமொழி கேள்வி

சென்னை: விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்து சூளைப்பள்ளம் பகுதியில் திமுக மகளிரணி செயலாளரும், மக்களவை திமுக குழு துணை தலைவருமான கனிமொழி எம்பி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தான். குடிநீர், ரேஷன் என போராட்டம் தான். படித்த இளம்பெண்கள், இளைஞர்கள் யாருக்கும் தமிழகத்தில் இன்று வேலை கிடையாது. இதே அதிமுக ஆட்சியில்தான் கோடி கோடியாக செலவு செய்து 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். அதில் ஒரு தொழிற்சாலை வந்திருக்கிறதா.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோதும் அதை ஆதரித்து ஓட்டுப் போட்டது அதிமுகதான். இன்று காஸ் சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே போகிறது. மறுபடியும் விறகு அடுப்புக்கே கொண்டுபோய் விட்டுவிடுவார்களா என்று தெரியவில்லை. கடந்த தேர்தலில் அதிமுகவினர் மொபட் கொடுக்கிறேன், செல்போன் கொடுக்கிறேன் என்றார்களே கொடுத்தார்களா செட்டாப்பாக்ஸ் கொடுக்கிறேன் என்றார்களே வந்ததா? இது எதுவும் வரவில்லை. அதுபோலதான் இலவச காஸ் சிலிண்டரும், வாஷிங் மெஷினும் வராது. அவர்கள் ஆட்சிக்கும் வர மாட்டார்கள் என்றார்.

Related Stories: