திமுக பிரச்சாரத்தில் திட்டமிட்டு தகராறு!: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

கோவை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவருடைய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் வரதராஜனை ஆதரித்து சமூக ஆர்வலரான சபரிபாலா தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு பொள்ளாச்சி அருகே உள்ள  ஒக்கிலிப்பாளையம் என்ற கிராமத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு திரண்ட அதிமுக-வினர் சிலர் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே சிறிது நேரம் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒக்கிலிப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவரான பார்த்தசாரதி இன்று வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்வதாக பிரவீன் மிரட்டியதாக பார்த்தசாரதி புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன், உதவியாளர் வீராசாமி உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல், தகாத வார்த்தையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு திமுக பிரச்சாரத்தில் தகராறு செய்ய தூண்டியதாக பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: