போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் சாலையோரம் காய்ந்து கிடக்கும் செடி-கொடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை துவங்கியது முதலே, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி 96 டிகிரி பாரன்ஹீட்டான பதிவான வெயில் அளவு, 6ம் தேதி 98 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது. கடும் வெயில் வாட்டியெடுத்து வருவதால், விவசாய நிலங்கள் மட்டுமின்றி சாலையோரம் உள்ள இலை, தழை மற்றும் செடி கொடிகளும் காய்ந்து சருகாகி வருகின்றன. இந்நிலையில், சாலையில் செல்வோர் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வீசி செல்வதால், காய்ந்து கிடக்கும் செடி கொடிகள் தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த தீயை அணைக்காமல் விடுவதால் பல மீட்டர் தொலைவிற்கு பரவி வருகிறது.