7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டு சிறை: வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

வேலூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதி பக்கிரிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம்தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் அவளிடம் கேட்டபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி செல்வம் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி விக்னேஷூக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, விக்னேஷ் தனது காதலியை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: