சாத்தூர்: சாத்தூர் அருகே 2 மாதங்களாக மூடியிருந்த பட்டாசு ஆலையில் ரசாயனப் பொருட்களை ஒதுக்கி வைத்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் காவலாளி பலியானார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வி.சுந்தரலிங்கபுரத்தில் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் (30) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. 7 அறைகள் கொண்ட இந்த ஆலையில் நேற்று ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மூலப்பொருட்களை காவலாளியான தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விஜய் (எ) சங்கரலிங்கம் (30) ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறை முழுவதும் சேதமடைந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சங்கரலிங்கம் உயிரிழந்தார்.