திமுக வெற்றி பெற்றவுடன் ஒட்டன்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி-அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று, ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம், மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, மார்க்கண்டாபுரம், புளியம்பட்டி, மொல்லம்பட்டி, வில்வாதன்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்பட்டு, தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தப்படும். ஒட்டன்சத்திரம் - பழநி இடையே, ஆயக்குடி, தாலையூத்து, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடசந்தூர், நத்தம் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்தைப் பிரித்து, கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார். இதில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: