காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளராக ஆர்.வி.ரஞ்சித்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று உத்திரமேரூர் நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் தெரிவித்ததாவது: ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் பிரதானமானது உத்திரமேரூர் ஏரி. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியைக் காட்டிலும் அதிகமாக பெய்தது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளுக்கு கணிசமான நீர்வரத்து இருந்ததால் நிரம்பின. ஆனால் உத்திரமேரூர் ஏரிக்கான வரத்துக் கால்வாய் பராமரிப்பில்லாததால் ஏரிக்கு நீர் வராமல் நிரம்பவில்லை. எனவே, அமமுக சார்பில் போட்டியிடும் எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் உத்திரமேரூர் ஏரி நீர்வரத்துக் கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.