தோகைமலை அருகே குளிக்கும் போது விபரீதம் கிணற்றில் மூழ்கி சமையல் தொழிலாளி பரிதாப பலி

தோகைமலை : கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுளேஸ்வரன்பட்டி ஜோதி நகரை சேர்ந்தவர் காளிமுத்து மகன் ராஜேந்திரன்(42). இவர் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் தோகைமலை அருகே வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கர் தோகைமலை அருகே உள்ள ஆதிபரந்தாடி கன்னிமார் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று வீரப்பூர் திருவிழாவிற்கு செல்வதற்காக ராஜேந்திரன் தனது உறவினர்களுடன் பரந்தாடி கோயிலுக்கு வேனில் வந்துள்ளார்.

பின்னர் பரந்தாடி கோயில் அருகே உள்ள கடம்பர்கோவில் மானியத்திற்கு உட்பட்ட விவசாய கிணற்றிற்கு ராஜேந்திரன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறிய ராஜேந்திரன் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கினார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மணப்பாறை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிய ராஜேந்திரனின் உடலை மீட்டனர்.

இது குறித்து ராஜேந்திரனின் தம்பி செல்வகுமார் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனின் உடலை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: