புதுடெல்லி : பட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவைக் கொலை செய்த குற்றவாளி ஆரிஸ் கானுக்கு மரண தண்டனை விதித்து டெல்லி செசனஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.தெற்கு டெல்லியில் ஜமியா நகரில் கடந்த 2008ம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்ற பகுதியில் தீவிவராதிகள் தங்கியிருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
தீவிரவாதிகளின் பதில் தாக்குதலில் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மா குண்டு பாய்ந்ந்து பலியானார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆரிஸ் கான் தப்பியோடினார். நேபாள எல்லையில் அவரை டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பான வழக்கு டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப், ஆரிஸ் கான் குற்றவாளி என கடந்த 8ம் தேதியன்று தீர்ப்பளித்தார்.
அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் 15ம் தேதி 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கில் நேற்று கூடுதல் செசன்ஸ் நீதிபதி சந்தீப் யாதவ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘‘ஆரிஸ் கான் நீதியை நிலைநாட்டும் கடமையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை அதிகாரியை சுட்டுக்கொலை செய்துள்ளான். எனவே, ஆரிஸ்கானுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைகயம் விதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டு நீதிபதி, குற்றவாளி ஆரிஸ்கானுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு, ₹11 லட்சம் அபராதம் விதித்து இந்த தொகையை உடனடியாக பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் கூறி உள்ளார்.