புருஷன் வெளியூர் போயிருக்காரா? கவலை வேண்டாம்... நாங்க இருக்கோம்: ஆரம்பிச்சுட்டாருல்ல திண்டுக்கல் சீனிவாசன்; அமைச்சர் பேச்சால் பெண்கள் கொதிப்பு

திண்டுக்கல்: புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே மீண்டும் களமிறங்கியுள்ளார். குமரன் திருநகரில் அமைச்சர் நேற்று தனது பிரசாரத்தை துவக்கினார். திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நாற்பது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் யாரையும் நான் மிரட்டவில்லை. முதல்வர் எடப்பாடி தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் உட்பட பலவற்றை தருவதாக அறிவித்துள்ளார். அதேபோல் பெண்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் தருவதாக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் உங்கள் கணவன்மார்கள் எங்கு சென்றாலும், வெளியூர் சென்றாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்’’ என்று உளறிக் கொட்டினார். இதை கேட்டு அங்கு திரண்டிருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் துவக்கத்திலேயே உளற ஆரம்பித்துவிட்டார். இன்னும் 20 நாள் பிரசாரத்தில் என்னவெல்லாம் பேச இருக்கிறாரோ என கட்சிக்காரர்கள் முணுமுணுத்தனர்.

Related Stories: