பெங்களூரு: பெங்களூரு, டெல்லி, கேரளா உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 5 ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் ஆன்லைன் வாயிலாக ஐ.எஸ் தீவிரவாதத்துக்கு ஆள்சேர்ப்பு பணியில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு குண்டு வெடிப்பு நிகழ்த்துவது குறித்து பயிற்சி அளித்திருப்பதாகவும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மெட்ரோ சிட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இளைஞர்களை மூளை சலவை செய்து, அவர்களை தீவிரவாத அமைப்பில் சேர்த்து, குண்டு வெடிப்பு நிகழ்த்துவது குறித்த பயிற்சி அளித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து மத்திய உளவுத்துறை தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கும் இடங்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் உத்தரவிட்டனர்.