அறந்தாங்கி அருகே சிமென்ட் காரைகள் பெயர்ந்து சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்

அறந்தாங்கி : தினகரன் செய்தி எதிரொலியால் அறந்தாங்கி அருகே சிமென்ட் காரைகள் பெயர்ந்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் அமைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து மூக்குடி வழியாக புதுக்கோட்டை, திருச்சி செல்லும் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. மின்கம்பம் கீழே விழுந்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கை செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.இதன் எதிரொலியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் சேதமடைந்த மின்கம்பத்துக்கு பதிலாக புதிய மின்கம்பத்தை அமைத்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் நலனில் அக்கறை கொண்டு செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: