நான்காம் ஆண்டில் அமமுக துரோக சக்திகளை விரட்டியடிப்போம்: டிடிவி.தினகரன் கடிதம்

சென்னை: நான்காம் ஆண்டில் அமமுக அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு தொண்டர்களுக்கு டிடிவி.தினகரன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதம்:  

ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக தொடங்கப்பட்ட அமமுக வெற்றிகரமாக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜெயலலிதாவின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, தமிழ்நாட்டு நலன்கள் பறிபோவதை வேடிக்கை பார்த்து தங்களின் சுயலாபத்திற்காக கட்சியை அடமானம் வைத்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதையே பிரதான நோக்கமாக வைத்து செயல்பட்ட நமது துரோகிகள் பண மூட்டைகளோடு மக்களை சந்திக்க வருகிறார்கள். இந்தத் தேர்தலோடு அந்த துரோக சக்திகள் காணாமல்போகும் அளவிற்கு நமது பலத்தை அவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நிரூபிக்கும் வகையில் நமது வியூகமும் உழைப்பும் அமைய வேண்டும். இந்த துரோக சக்திகளை விரட்டியடித்து ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை நமது அமமுக தலைமையில் அமைக்க இந்த நல்ல நாளில் சபதமேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: