ஈரோடு: கட்சிக்காக 10 ஆண்டுகளாக உழைத்த என்னை எச்சில் இலைபோல தூக்கி எறிந்துவிட்டார்களே என்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் கண்ணீர் விட்டு கதறினார்.பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்துக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கட்சி தலைமை அறிவித்துள்ள வேட்பாளரை தோற்கடிக்கப்போவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நேற்று பெருந்துறையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் கட்சிக்காக 8 முறை சிறை சென்றவன். 2011 தேர்தலுக்காக மிகப்பெரும் நிதி திரட்டி ஜெயலலிதாவிடம் கொடுத்தேன். எனக்கு பெருந்துறையில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் பணியாற்றி வெற்றி பெற செய்தேன். 2016ல் அதிமுக ஆட்சி அமைய பெருந்துறையில் நான் நடத்திய கூட்டம்தான் திருப்பு முனையாக இருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பின் கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தேன். கூவத்தூரில் என்னிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர் பதவி தருவதாக கூறினார். ஆனால் வேண்டாம் என்று பெருந்தன்மையாக கூறினேன்.