மஜதவில் மேலிடம் என்று எதுவும் கிடையாது: எச்.டி.குமாரசாமி தகவல்

மைசூரு: மஜதவில் மேலிடம் என்று எதுவும் கிடையாது. அனைவரும் மேலிடத்தை போல் உள்ளனர் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். மகாசிவராத்திரியை முன்னிட்டு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்ட முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது: ``மாவட்ட கூட்டுறவு தேர்தலில் நான் எப்போதும் போட்டியிட்டது கிடையாது. சகோதரர் எச்.டி.ரேவண்ணா அதிகமாக போட்டியிட்டுள்ளார். ஆனால் மைசூரு மைமுலுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். இந்த நோக்கத்துக்காக நானே 2 நாட்கள் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன்.  மஜதவிலிருந்து அதிகமானவர்கள் வெளியே சென்று வருகின்றனர் இதை தடுக்க கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மஜதவில் மேலிடம் என்று எதுவும் கிடையாது. அனைவரும் மேலிடம் போன்றவர்கள்.  மஜதவின் கதவு எப்போதும் திறந்துள்ளது வருபவர்கள் வரட்டும், போறவர்கள் போகட்டும். மதுபங்காரப்பா சென்றால் புதியவர்கள் வருவார்கள். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இது கட்சிக்கு புதியதும் கிடையாது. மஜதவில் வளர்ச்சியடைந்து தேவகவுடாவின் முதுகில் குத்தி சென்றவர்கள் அதிகம். அது குறித்து அதிகமாக சொல்லக்கூடாது. வரும் நாட்களில் கட்சியின் கொள்கையில்லாதவர்களை சேர்த்துக்கொள்வதில்லை’’ என்றார்.

Related Stories: