மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யா போட்டி 6 மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வைகோ அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வைகோ அறிவித்தார். அதன்படி மதுராந்தகத்தில் மல்லை சத்யா, வாசுதேவநல்லூர் தொகுதியில் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகின்றனர். வைகோவின் மகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போட்டியிட விருப்பமுள்ள ஒவ்வொருவரிடம் தனித்தனியாக நேர்காணல் நடத்தினார்.

இந்த நேர்காணல் முடிந்தவுடன் நேற்று இரவு மதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் மல்லை சத்யா, சாத்தூர் தொகுதியில் ரகுராம், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் சதன் திருமலைக்குமார், பல்லடம் தொகுதியில் முத்துரத்தினம், அரியலூர் தொகுதியில் சின்னப்பா, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்’ என்றார். அதில், சாத்தூர் தொகுதியில் வைகோ மகன் துரைவையாபுரி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

Related Stories: