பல்லடம், கள்ளக்குறிச்சி, செய்யூர் தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் மறியல்

சென்னை: பல்லடத்தில் எம்.எஸ்.எம். ஆனந்தன், செய்யூரில் கணிதா சம்பத் ஆகிய அதிமுக வேட்பாளர்களை மாற்றக் கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி  பங்கீடு நடந்து வருகிறது. ஆனால், திடீரென நேற்று மாலையில் அ.தி.மு.க.வின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இவர்களில் பல வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையறிந்த 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பல்லடம் பேருந்து நிலையம் முன்பாக நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனை மாற்றிவிட்டு தற்போதைய எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணியில் செயலாளராக உள்ள செந்தில்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத நபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான முன்னாள் எம்எல்ஏ அழகுகேலுபாபுவை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி அதிமுக நகர பொருளாளர் சுரேஷ் தலைமையில் 150க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திடீரென கட்சி கொடியுடன் கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். இதையடுத்து, அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

செய்யூர்:  காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி வேட்பாளராக மதுராந்தகம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத்தை அதிமுக தலைமை அறிவித்தது. தொகுதிக்கு சம்பந்தமில்லாதவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தொகுதியை சேர்ந்த சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரவீன்குமாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் சித்தாமூர் 4 முனை சந்திப்பு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சித்தாமூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதிமுகவினரின் இதுபோன்ற சாலை மறியலால் அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து பாதித்தது.  கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதால் எதிர்ப்பு: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புரட்சி பாரதம் கட்சியினருக்கு தொகுதி ஓதுக்கீடு செய்யப்படுவதாக தகவல்  வெளியானது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் லத்தேரி பஸ் நிலையத்தில் அதிமுக கட்சி கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியை அதிமுகவினருக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்பாடி போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையேற்று அதிமுகவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

காலையில் போராட்டம்; மாலையில் வேட்பாளர்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புரட்சி பாரதம் கட்சியினருக்கு தொகுதி ஓதுக்கீடு செய்யப்படுவதாக தகவல்  வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் லத்தேரி பஸ் நிலையத்தில் அதிமுக கட்சி கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியை அதிமுகவினருக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்பாடி போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையேற்று அதிமுகவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: