எங்கள் கட்டுப்பாட்டில் 20 லட்சம் வாக்குகள் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?...ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் ஆதரவு, பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து தேசிய கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி அளித்த பேட்டி: ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக நிறுத்தி வழங்க வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதைப் போலவே ஊராட்சி மன்ற  தலைவர்களுக்கும் மாத ஊதியம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுதும் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். அவர்களின் கட்டுப்பாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் எங்களுடைய கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் முன்வைக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: