தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதமர் பொதுவானவர் என்பதால் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். 5 மாநில சட்டசபை தேர்தல் வரும் ஏப்.6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் தேர்தலுக்கான முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. அரசமைப்புச் சட்டம் 74-வது பிரிவின்படி, பிரதமரும், அமைச்சர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே தேர்தல் பிரசாரத்தில் கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பங்கேற்க முடியாது. அவ்வாறு பங்கேற்பதாக இருந்தால் பிரதமர் பதவி விலக வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே, பிரதமர் பிரசாரம் செய்வதை தடை செய்ய வேண்டும் என கூறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: