கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு பெரியார் சிலைக்கு டயர் மாலை அணிவித்து தீ வைப்பு-பொதுமக்கள் தர்ணா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு டயர் மாலை அணிவித்து, மர்ம நபர்கள் தீ வைத்தனர்.கிருஷ்ணகிரி அடுத்த குப்பம் சாலையில், காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் ஆட்டோ டயரை மாலையாக அணிவித்து, அதற்கு தீ வைத்துள்ளனர். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பெரியார் சிலை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மகாராஜாகடை போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: