காரைக்குடி: தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியில் நம்பிக்கை கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 8 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த முறை திமுகதான் ஆட்சி அமைக்கும் என சொல்லப்படும் நிலையில் அக்கட்சி தொகுதி பங்கீடு, தொகுதிகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவற்றில் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முடித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியில் நம்பிக்கை கிடையாது. ம.நீ. ம கூட்டணியில் இணைய காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி தேவை என காரைக்குடியில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சூசகமாக தெரிவித்தார். நமக்கு அணுக்கமான அரசை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். மக்களுக்கு ஆதரவான அரசு அமைய அதிமுக தோல்வியுற வேண்டும்.
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரசின் இடத்தை பிடித்து விடும். காங்கிரசின் தவறான உத்திகளால் பாஜகவின் கைக்கு கர்நாடகம் சென்று விட்டது. தபால் வாக்குகளைப் பெறுவதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நமக்கு அணுக்கமான அரசை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் திமுக, இடதுசாரிகள், மதிமுக, விசிக, கூட்டணியில் இருப்பதால் பாஜகவை வலுவாக எதிர்க்க முடிகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அகில இந்திய அளவில் முக்கியமான ஒன்றாகும். அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் தமிழகத்தின் முதல்வராக வரக்கூடாது எனவும் கூறினார்.