பேச்சுவார்த்தைக்கு வர தயக்கம் எதிரொலி சட்டமன்ற தேர்தலில் 15 சீட்கள் மட்டும்தான்: தேமுதிகவுக்கு அதிமுக ‘கெடு’; கூட்டணி இல்லை என எச்சரிக்கை

சென்னை: பேச்சுவார்த்தைக்கு வர தயக்கம் காட்டியதை அடுத்து தேமுதிகவிற்கு 15 சீட்கள் மட்டுமே தர அதிமுக சம்மதித்துள்ளது. நாங்கள் வழங்கும் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும். இன்று இரவுக்குள் பதிலை சொல்லாவிட்டால் கூட்டணி கதவுகள் மூடப்படும் என்று அதிமுக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது தேமுதிகவுக்கு ஒதுக்கிய 41 தொகுதிகளை மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், பாஜ, பாமகவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அதிமுக, விஜயகாந்த்துக்கு கொடுக்கவில்லை. இதனால் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,  அதிமுக தரப்பில் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, அதிக சீட், பணம், கேட்கும் தொகுதிகளை தேமுதிக டிமாண்ட் வைத்தது. பாமகவை போல எங்களுக்கும் 23 சீட் தர வேண்டும் என்று தேமுதிக தரப்பில் இதை கேட்ட முதல்வர் 10 தொகுதிகள் வரை தர சம்மதித்தார். ராஜ்யசபா எம்பி சீட் பிறகு பேசலாம். விருகம்பாக்கம் தொகுதி தருகிறோம் என்று முதல்வர் தெரிவித்தாராம். மேலும் தேமுதிக கேட்கும்அளவுக்கு பணத்தை தர முடியாது என்று அமைச்சர் தங்கமணி நிராகரித்து விட் டதாக தகவல்கள் கசிந்தது. இதனால் பேச்சுவார்த்தை முறிந்தது.

இந்நிலையில் நேற்று 3 முறை  பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக தரப்பில் அழைத்தும் தேமுதிக வரவில்லை. இந்த நிலையில் திடீரென அதிமுக தரப்பில் 15 தொகுதிகளை வழங்குகிறோம். ராஜ்ய சபா எம்பி சீட் கிடையாது. கேட்கும் தொகுதிகளை தர முடியாது. தேர்தல் செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். இதற்கு சம்மதம் என்றால் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், தேமுதிகவினர் 20 தொகுதிகளில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் தேமுதிக கூட்டத்தில் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ‘கூட்டணிக்காக அதிமுக தான் கெஞ்சுகிறது. நாம் அவர்களை கெஞ்சவில்லை. 2011 தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருக்காது’’ என்று அதிரடியாக பேசினார். இந்த பேச்சு அதிமுகவினரை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்கு வங்கியே இல்லாமல் அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவினர் மிரட்டி வருகின்றனர். இனிமேல் வந்தால் வரட்டும். வரவாவிட்டால் பரவாயில்லை என்று அதிமுகவினர் கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 15 தொகுதிகள் தரலாம்.

அதற்கு மேல் கேட்டால் கூட்டணியில் நீங்கள் இருக்க வேண்டுமா என்பதை அதிமுக பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அதிமுக கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் நீதி மையத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தம் தேமுதிக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வர தேமுதிவுக்கு இன்று இரவு வரை அதிமுக தரப்பில் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கெடுவுக்குள் வந்தால் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும். வரவில்லை என்றால் அதிமுகவில் கூட்டணியின் கதவுகளை அடைத்து விடுவோம் என்று தேமுதிவுக்கு அதிமுக  எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: