கூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜ வேட்பாளராக கவுதமி அறிவிப்பு: அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பாஜ வேட்பாளராக கவுதமியை அறிவித்தது, அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பாஜ சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அவரை சட்டமன்ற பொறுப்பாளரான நடிகை கவுதமி வரவேற்றார். கூட்டத்தில் சுதாகர் ரெட்டி பேசுகையில், ``ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நடிகை கவுதமியை வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்’’ என்றார்.

பின் அவர் செய்தியாளர்களிடம் சுதாகர் ரெட்டி கூறுகையில், பாஜ சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் முறையான விதிமுறைகளை அனுசரித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம். இறுதி முடிவு எந்த நிலைப்பாடாக வேண்டுமானாலும் இருக்கலாம்’’ என்றார். அதிமுக, பாஜவிற்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவடையாத நிலையில், ராஜபாளையத்தில் வேட்பாளரை பாஜ தன்னிச்சையாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடைய சலசலப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: