அவசர கதியில் தொடங்கிய மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்காக அணையின் கரை உடைப்பு

* 120 அடியை எட்டும்போது அபாயம் அதிகரிக்க வாய்ப்பு

* பொறியியல் வல்லுநர்கள் ‘பகீர்’ குற்றச்சாட்டு

மேட்டூர்: தெலங்கானா மாநிலத்தில் நீரேற்று திட்டங்கள் மூலம் மாநிலம் முழுவதும் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மேட்டூர் அணை உபரிநீரை, நீரேற்று திட்டத்தின் மூலம் வறண்ட ஏரிகளுக்கு திருப்பும் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்று தகவல் பரவியதால், கடந்த 25ம் தேதி, அவசர அவசரமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திட்டத்தை தொடங்கி வைத்தார். மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டும் நேரங்களில், லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர், உபரிநீராக வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இப்படி கடலில் வீணாக  கலக்கும் 0.50 டி.எம்.சி தண்ணீரை நீரேற்று திட்டத்தின் மூலம் கொண்டு சென்று 100 ஏரிகளை நிரப்பலாம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 4,240 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

மேலும் 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியடையும். அதோடு நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயரும் என்று கோரிக்ைக எழுந்தது. மேலும் மேட்டூர் அணை கட்டபட்டதிலிருந்து அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்திற்கும், அணைக்கு தங்களின் நிலங்களை விட்டுத்தந்த மேட்டூர் மக்களுக்கும்  பாசன வசதிக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே உபரிநீர் பயன்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதன் காரணமாக 2019ம் ஆண்டு ஜூலை 15ந்தேதி பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் மேட்டூர் உபரிநீர் பயன்பாட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ₹565 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தேர்தலுக்குள் பணியை முடிக்க அவசரம் அவசரமாக பணி தொடங்கப்பட்டது. ஆனால்,தற்போது 60 சதவீத  பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (25ம் தேதி) அவசரம்,  அவசரமாக திட்டத் துவக்கவிழா நடத்தப்பட்டது.

மீதம் உள்ள பணிகளை முடிக்க இன்னும் எட்டு மாதங்கள் ஆகும். இது ஒருபுறமிருக்க,  மேட்டூர் அணை இன்னும் நிரம்பவில்லை. உபரிநீர் வந்தால் மட்டுமே ஏரிகளுக்கு திருப்பப்படும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். ஆனால் அணையின் நீர் மட்டம் 103 அடியாக இருக்கும் போதே ஏரிகளுக்கு தண்ணீர் விடுவிக்கப்படுவது அபத்தமானது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. தற்போது அணையின் நிர்மட்டம் 103 அடி. அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள கரைப்பகுதியான மலையை உடைத்து தண்ணீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வந்து பம்ப் மூலம் ஏரிக்கு அனுப்பியுள்ளனர்.எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்த தண்ணீருக்கு மலர் தூவி முதல்வர் வணங்கினார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டார். முதல்வர் சென்ற சிறிது நேரத்திலேயே ஏரிக்கு வந்து கொண்டிருந்த காவிரிநீர்  நிறுத்தப்பட்டது. எம்.காளிப்பட்டி ஏரியில் அவசர கதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏரியில் உள்ள கோவில் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

திப்பம்பட்டியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள  எம்.காளிப்பட்டி ஏரிவரை மட்டும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் தண்ணீரை நிரப்ப 940 குதிரைத்திறன் கொண்ட     10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து 2.20 மீட்டர் விட்டமுள்ள குழாயின் வழியாக வினாடிக்கு 126 கனஅடி வீதம் எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து 23 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்ல இன்னமும் குழாய்கள் பதிக்கப்படவில்லை. கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரைகள்  பலப்படுத்தப்படவில்லை. வெள்ளாளபுரம் ஏரியில் துணை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு 640 குதிரைத்திறன் கொண்ட 4 மின்மோட்டார்கள் மூலம் 5.50 கிமீ தொலைவில் உள்ள வடுகப்பட்டி கீழ் நிலை நீர்தேக்க தொட்டிக்கும் நீர் கொண்டு செல்லப்படுகிறது.

எம்.காளிப்பட்டி தொகுப்பிலிருந்து கண்ணந்தேரி ஏரியின் துணை நீரேற்று நிலையம் மூலம் 30 ஏரிகளுக்கு உபரிநீர் வழங்கப்படவுள்ளது. திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நங்கவள்ளி ஏரிக்கு  தண்ணீர் கொண்டு சென்று 33ஏரிகள் மற்றும் குட்டைகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் மேலும் கூறுகையில், ‘‘எந்தவித தொழில்நுட்ப ஆலோசனையும் இன்றி, தற்போதைய அணையில் இருக்கும் தண்ணீரின் கொள்ளளவை மட்டும் வைத்து, அந்த பகுதியை குடைந்து திறப்பு விழாவுக்காக தண்ணீரை கொண்டுவந்துள்ளனர். இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம்  120 அடியாக எட்டும்போது அந்த பகுதி உடைந்து, அங்குள்ள கிராமங்கள், பொதுமக்கள் பெரிய ஆபத்திற்கு தள்ளப்படுவார்கள். தண்ணீரின் அளவு உயரும்போது ஆபத்து ஏற்படும் என்பதை கணக்கில் கொள்ளவில்லை. இதுபோல் பல்வேறு அபாயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்,’’ என்றனர்.

திட்டமிட்டே மக்களை புறக்கணித்து விட்டனர்

‘‘முறையாக உபரி பயன்பாட்டு திட்டத்தை செயல்படுத்தினால் காளிப்பட்டி ஏரியில் இருந்து செக்காரப்பட்டி, வெள்ளாறு ஏரி ராஜவாய்க்கால் வழியாக பள்ளிப்பட்டி, உப்புப்பள்ளம் வரை 50 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் வசதி தரமுடியும். இதேபோல் புக்கம்பட்டி, தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் வழியாக 50ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கும் பாசன வசதி செய்ய முடியும். மேலும் காளிப்பட்டி ஏரியில் இருந்து குட்டப்பட்டி, மாதநாயக்கன்பட்டி,முத்தம்பட்டி, மானத்தாள் வழியாக பல ஆயிரம் ஏக்கர் பாசனவசதி செய்யமுடியும். முதல்வருக்கு இந்த பகுதி மக்களை பிடிக்கவில்லையோ,என்னமோ தெரியவில்லை. இதனால் திட்டமிட்டே இந்த பகுதி மக்களை புறக்கணித்துள்ளார். திமுக ஆட்சி வந்தவுடன், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாத வகையில் தொழில்நுட்ப வசதிகளை செய்து இந்த பகுதி மக்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்ேபாம்,’’ என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

சேகர்ரெட்டியின் பினாமிகள் டென்டர்

இந்த திட்டத்திற்கான ஒப்பந்த பணியை சர்ச்சைக்கு பிரசித்தி பெற்ற சேகர்ரெட்டி எடுத்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் சப்-கான்டிராக்ட் எடுத்து வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. மேட்டூர் நகரில் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், தேர்தலை சந்திக்காமல் பதவிக்கு வந்தவரின் பினாமிகள் மூலம் சுமார் ₹200 கோடி பணிகளை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களால் ஓரங்கட்டப்பட்டு ஒப்பந்தம் கிடைக்காத அதிமுக புள்ளிகள் வெறுப்பின் உச்சத்தில் இந்த தகவலை கசியவிட்டுள்ளனர். அதேபோல் மோட்டார்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வெடி வைத்து தகர்த்து உடைப்பு

மேட்டூர் அணையின் உபரிநீரை எடுப்பதற்காக, அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்த பிறகு, அதில் இருந்து தண்ணீர் எடுக்கும் வகையில், கால்வாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருக்கும் போதே, இத்திட்டத்தை செயல்படுத்தியதாக காட்ட வேண்டும் என்பதற்காக, தண்ணீர் உறிஞ்சுவதற்கு பல பாறைகளை வெடி வைத்து தகர்த்து, கரைகளை சேதப்படுத்தி, தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அணையின் நீர்மட்டம் 120 அடியாகும் முன்பாக, அந்த பள்ளத்தை அடைக்க வேண்டும். இல்லாவிட்டால், தண்ணீர் அதிகளவில் வெளியேறக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தண்ணீரை எடுத்தது, பல சிக்கல்களை ஏற்படுத்தும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: