திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மெயின் ரோட்டில் நேற்று இரவு திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வர் பழனிசாமி மக்களை சந்தித்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவர் எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார் என்பது உங்களுக்கே தெரியும். திமுக தலைவர் அறிவிக்கும் திட்டத்தை இவர் செய்து வருகிறார். 4 வருடம் பதவியில் இருந்த அவர் மக்களுக்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் பாஜவிடம் அடகு வைத்துள்ளார். மேலும், தமிழ் மொழியையும், மாநில உரிமைகளையும் பதவிக்காக அடகு வைத்தவர் தான் முதல்வர் பழனிசாமி. 4 ஆண்டுகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. 23 லட்சம் படித்த இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இப்படி கடன் வாங்கி எந்த பணிகளையும் துரிதமாக மேற்கொள்ளவில்லை. வளர்ச்சி பணிகளும் நாட்டில் நடைபெறவில்லை. இந்த அதிமுக ஆட்சியில் சாலை போடுவதற்காக டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. குளோபல் டெண்டர் என்று நான்கு வருடமாக மக்களிடத்தில் வரி பணத்தை ஏமாற்றி வரும் அரசுதான் இந்த அரசு.