ஆசனூரில் கும்பேஸ்வரர் சுவாமி கோயில் தேர்த்திருவிழா

சத்தியமங்கலம் : தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர் சுவாமி குண்டம் மற்றும் தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசிமாதம் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள பழைய ஆசனூர் கும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி எண்ணெய் மஜ்ஜன சேவை மற்றும் அலங்கார பூஜையுடன் விழ தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சித்தூர் கும்பேஸ்வரர் சுவாமி மற்றும் பிரம்மதீஸ்வரர் சுவாமிகளை அழைத்தல் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து பால்குடம் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று அதிகாலை கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் கோயில் பூசாரிகள் தீ மிதித்து சுவாமியை வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று மதியம் கோயில் வளாகத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடக மாநில பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதை தொடர்ந்து கும்பேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  திருவிழாவிற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மறு பூசையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: