டிடிவி தினகரனை முதல்வராக்க அதிமுகவை மீட்போம்: அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா முதன்முதலாக ஜெயலலிதா பிறந்த நாளின்போது தான் தன் அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளார். அப்போது அவர் அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் குறிவைத்தே பேசினார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சந்தித்து பேசினர். எனினும் அமமுக விஷயத்தில் அவர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

எனினும் அமமுகவை வழிநடத்த டிடிவி.தினகரனுக்கு பல கட்ட ஆலோசனைகளை சசிகலா ரகசியமாக வழங்கி வருகிறார்.

அதன்படி தான் 11 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் பங்கேற்றார். இதையடுத்து கூட்டத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்வதற்கு கட்சி பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரியின் கீழ் மத்திய அரசு கொண்டுவர வேண்டும். மேலும், தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை தமிழக முதலமைச்சர் அரியனையில் அமரவைக்க பாடுபடுவோம் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

* மார்ச் 3 முதல் விருப்ப மனு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற மார்ச் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவம் பெறலாம். விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை தமிழ்நாடு ரூ.10,000, புதுச்சேரி ரூ.5,000

Related Stories: