காவிரி மிகை நீரை பயன்படுத்த கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை: வைகோ அறிக்கை

சென்னை: காவிரி மிகை நீரை பயன்படுத்த கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை : கர்நாடக பாஜ அரசின் முதலமைச்சர் எடியூரப்பா, “தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதை தடுத்து நிறுத்துவோம்” என்று கொக்கரித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கமான மழை ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தில் உறுதி செய்வது மட்டுமே கர்நாடக அரசின் வேலையாகும். தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை வடிநிலப் பகுதியான தமிழகம் தக்க வழியில் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை. தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரை தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதை தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசு இதனை திட்டவட்டமாக உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிற்கும் தெளிவுபடுத்திவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: