ஆட்சியை கவிழ்த்த மோடியை மக்கள் தண்டிப்பார்கள்: நாராயணசாமி காட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்து ஜனநாயக படுகொலை செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று அண்ணா சிலை அருகே நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-  மத்தியில் உள்ள மோடி அரசால் புதுவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் கூட்டணி கட்சியாக உள்ள என்.ஆர். காங்கிரசும், அதிமுகவும்தான் பொறுப்பு. 10 நாட்களே உள்ள நிலையில் எங்களுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணம் என்ன? பிரதமர் வருவதற்கு முன் காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது. இதுதான் அவர்களது திட்டம்.  தங்களுடைய அதிகார பலம், பணம் ஆகியவற்றை உபயோகப்படுத்தி, காங்கிரசில் இருந்து வெளியே சென்ற சில கருப்பு ஆடுகள் துரோகிகள் துணையோடு ஆட்சியை கவிழ்த்துள்ளார்கள்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 18 பேர் டெபாசிட் இழந்தார்கள். டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கவிழ்க்கிறீர்களே, உங்களுக்கு சூடு, சொரணை இருக்கிறதா? புதுவை மக்கள் வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு முட்டைதான் கொடுப்பார்கள்.  பா.ஜ.கவுடன் கூட்டணி சேரும் என்ஆர் காங்கிரசும், அதிமுகவும் சாம்பலாகி விடும். மோடிக்கு மக்கள் தண்டனை கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார். மக்கள் துரத்தி அடிக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசும்போது, ‘‘புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு பா.ஜ.க.வுக்கு அதிமுக துணை போயுள்ளது. விலை போனவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக வருவார்கள், அவர்களை மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற 6 பேரும், எந்த காலத்திலும் அரசியலில் தலையெடுக்கக் கூடாது’’ என்று கூறினார்.

Related Stories: