ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 10 நாட்கள் பணி உத்தரவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 10 நாள் மட்டுமே பணி என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக காவல்துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட  ஊர்க்காவல் படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்து,  2019 பிப்ரவரி 19ம் தேதி உள்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பாஜ மாநில துணை தலைவருமான அண்ணாமலை உயர் நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், 10 நாட்கள் மட்டுமே பணி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், மாதம் முழுவதும் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

பத்து நாட்களுக்கான சம்பளம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் 2019ம் ஆண்டு அரசாணைப்படி 4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே ₹560 வழங்கப்படும். எனவே, காவல் துறையின் பெரும்பாலான பணிகளை செய்யும்  ஊர்க்காவல் படையினருக்கு 10 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்து, மாதம் முழுவதற்குமான ஊதியத்தை வழங்க நடவடிக்கையை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்  என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த  தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, தமிழக அரசும், டிஜிபியும்  10 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: