புதுடெல்லி; மைதானம் இல்லாத இடங்களில் குழந்தைகள் விளையாட வசதியாக பழைய லாரிகளை கொண்டு வந்து நிறுத்தி மொபைல் பூங்காவாக மாற்றி குழந்தைகள்விளையாட வழிவகை செய்யப்படும் என்று கிழக்கு டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. டெல்லி சுற்றுலா பூங்கா திருவிழா தற்போது நடந்து வருகிறது. இதில் மொபைல் பூங்கா அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பழைய லாரியில் மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்தி குழந்தைகள் விளையாடும் வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது கிழக்கு டெல்லி மாநகராட்சியும், மைதானம் இல்லாத பகுதிகளில் குழந்தைகள் விளையாட வசதியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய, விளையாடக்கூடிய கட்டமைப்புகள் இந்த லாரியில் உருவாக்கப்பட்டு, மைதானம் இல்லாத பகுதியில் நிறுத்தப்படும். அதில் குழந்தைகள் விளையாடி மகிழலாம் என்று கிழக்கு டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.