வேளாண் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ25 லட்சம் முறைகேடு: விஜிலென்ஸ் ரெய்டில் அம்பலம்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(53). தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர். சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர், தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ50 ஆயிரம் பயிர்க்கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. எனவே, ஸ்ரீதேவி கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கடனும் தள்ளுபடி ஆனதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான சான்றிதழ் வழங்க, கூட்டுறவு வங்கி செயலாளர் அண்ணாதுரை, ஸ்ரீதேவியிடம் ரூ5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஸ்ரீதேவி புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் அளித்த வழிகாட்டுதல்படி ஸ்ரீதேவி நேற்று மாலை 5 மணியளவில், கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரையிடம் வழங்க ரூ5 ஆயிரத்தை எடுத்து சென்றார். ஆனால் அண்ணாதுரை, பணத்தை நேரடியாக வாங்காமல், அருகே உள்ள மேஜை மீது வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி ஸ்ரீதேவி, பணத்தை மேஜை மீது வைத்துள்ளார். அண்ணாதுரை பணத்தை நேரடியாக கையில் வாங்காததால், லஞ்சஒழிப்பு போலீசாரின் பிடியில் இருந்து தப்பினார். இருப்பினும் போலீசார் இன்று அதிகாலை 4.30மணி வரை விடியவிடிய சோதனை நடத்தினர்.

அதில் பயிர் கடன் தள்ளுபடி செய்வது, பயிர் கடன் வழங்குவது உள்பட பல்வேறு வகையில் ரூ. 25லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்சஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ேமலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் செல்வராஜா (41), ஆனைமலை கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம் (36) ஆகியோர் கூட்டுறவு சங்க செயலாளர் சிவாஜி (46) என்பவரிடம், கடன் தள்ளுபடி செய்ய ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். சிவாஜி, ரசாயனம் தடவிய பணத்தை அளித்தபோது செல்வராஜ் மற்றும் ஆறுமுகம் (36) ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: