ஃபியூஸ் போனவங்களும் ரவுடிகளும் தான் பாரதிய ஜனதாவில் சேருகிறார்கள்: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா

* காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஒவ்வொன்றாக பாஜ காலி பண்ணிக் கொண்டிருக்கிறதே?

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கொல்லைப்புறமாக கொள்ளையடிக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார். அதனால் தான் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

* தமிழகத்திலும் ஒரு சில காங்கிரசார் பாஜவில் இணையத் தொடங்கியுள்ளனரே?

இது பொய்யான தகவல். யாரெல்லாம் ஃபியூஸ் போனவங்களும், யாரெல்லாம் சீனில் இல்லாதவர்களும், யாருக்கெல்லாம் இந்த சமூகத்தில் மரியாதை இல்லையோ அவர்கள் தான் பாஜகவுக்கு செல்கிறார்கள். அதை விட ஒருபடி மேலே சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள கொள்ளைக்காரர்களும், ரவுடிகளும் தான் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். நமக்கான சரியான இடம் இதுதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

* பிரதமர் மோடியை கண்டு காங்கிரஸ் பயப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதே?

இதுதான் உச்சகட்ட காமெடி. மோடி தான் காங்கிரசை பார்த்தும், மக்களை பார்த்தும் பயந்து கொல்லைப்புறமாக ஆட்சி அமைப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறார். நாட்டின் மீது நம்பிக்கையும், காங்கிரஸ் மீது பயமும் இல்லாமல் இருந்திருந்தால் ஜனநாயகத்துக்கு எதிராக எப்படி அவரால் ஆட்சி அமைக்க முடியும்.

* திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளால் தமிழகத்தில் பாஜவால் காலூன்ற முடியவில்லை. இந்த வேலையை மற்ற மாநிலங்களில் காங்கிரசால் ஏன் செய்ய முடியவில்லை?

தென்மாநிலங்களில் மோடிக்கு எதிர்ப்பான அலை வீசுகிறது. வட மாநிலங்களிலும் அவருக்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கு மதரீதியான பிரிவை ஏற்படுத்துகிறார்கள். மேலும் அங்குள்ள மக்கள் இன்னும் படிப்பறிவு இல்லாமல் ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மதரீதியாக அவர்களை பயன்படுத்துகிறார்கள். ஜனநாயக ரீதியாக எந்த மாநிலத்திலும் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பேக்டோர் மூலம் வந்தவர்கள். அதனால் அங்கும் செல்வாக்கு கிடையாது. தமிழகத்தில் அப்படியும் வரமுடியவில்லை. காரணம், இங்கு நடைபெறும் கொள்ளைக்கார ஆட்சியாளர்களின் பைல்களை எடுத்து வைத்துள்ளனர். எதாவது செய்தால் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என மிரட்டுகின்றனர். அதற்கு இவர்கள் அடிபணிந்திருக்கின்றனர். இது பெரியார் மண். சுயமரியாதை மண். யார் இங்கு கால் எடுத்து வைப்பது என்பதை முடிவு செய்வது தமிழக மக்கள். மோடி அடுத்த முறை தமிழகத்தில் கால் கூட வைக்க முடியாது.

Related Stories: