தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணியை உறுதி செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, அதிக சீட் கேட்டு பாஜவும், வன்னியருக்கான உள்ஒதுக்கீடு கேட்டு பாமகவும், இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்டு தேமுதிகவும் நெருக்கடி கொடுத்து வருவதால், சிக்கல் எழுந்துள்ளது. அதிமுக தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தாலும், அக்கட்சிகள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளன. பாமக நிர்வாகிகள் அதிமுகவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. பிரதமர் சென்னைக்கு வந்த போது கூட கூட்டணி கட்சியை சேர்ந்த பாமக, தேமுதிகவை சேர்ந்த தலைவர்கள் செல்லவில்லை. தொடர்ந்து சீட் பங்கீடு செய்வதில் இழுபறியாக உள்ளது. இது அதிமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.